திங்கள், 29 ஜூலை, 2013

பிறகு - பூமணி

நடைமுறை வாழ்க்கை அனுபவம் ஓரளவிற்கே பண்பட்ட செயல்பாட்டிற்கு உதவுகிறது. வாழ்வில் எதிர்கொள்ள முடியாத அனுபவங்கள், மனித மனத்தின் அலாதியான எண்ணங்கள், சமூகத்தின் மீதான விமர்சனம் எனப் பல முனைகளை இலக்கிய வாசிப்பு கொடுத்துதவுகிறது. அப்படியான ஓர் அனுபவத்தை எழுத்தாளர் பூமணியின் “பிறகு” கொடுத்தது என்றால் அது மிகையாகாது.


ஒரே வரியில் இந்தப் படைப்பை பற்றி சொல்ல வேண்டுமெனில் “காலத்தாலும் வரலாற்றாலும் கைவிடப்பட்டவர்களைப் பற்றிய கதை” என்று தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து ஒரு மேற்கோளைச் சுட்டினால் போதுமானது. சமூகத்தின் ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியினரின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்வதோடு, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான கால் நூற்றாண்டு கரிசல் பூமி கிராம வாழ்க்கையின் வாழ்வு முறையை எழுத்தாளர் பூமணி அவர்கள் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார். வட்டார மொழியில் தெலுங்கை ஆங்காங்கே கலந்திருப்பது மாறுபட்ட வகையில் சிறப்பானதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது.


ஒரு குறியீடாக வரும் வேம்பு மரத்தின்கீழ் தன் தொழிலைச் செய்யும் அழகிரி என்ற தலித்தின் நினைவோட்டத்தில் கதை விரிகிறது. அன்றைய சமூகத்தால் வரையறுக்கப்பட்ட குறுகிய சுதந்திர வட்டத்துக்குள் நேர்மையாகவும், அறம் காத்தும் வாழப் போராடும் அழகிரி மற்றும் சில எளியவர்களின் வாழ்க்கைச் சித்திரமே 'பிறகு' நாவலின் கதைக்களம். கிராம வாழ்க்கையின் முரண்பாடுகள், பணபலம், அதிகாரம் என அதன் பல முகங்களின் விவரணைகள் அழகாக வந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளராகத் தன் இருப்பைக் காட்டிக் கொள்ளாமல் கதையின் போக்கை பூமணி இயற்கையாக நகர்த்திச் செல்வது வாசிப்பனுபவத்தை சுவையானதாக்குகிறது.

இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரத்தால் இந்த எளியவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதை எந்த மிகையும் அலட்டலும் இல்லமால் இயல்பாகச் சுட்டிக் காட்டுகிறார். இந்த சுதந்திரத்தைக் கொண்டு பணமுள்ளவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டதையும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். ஓட்டு போடும் தினத்தன்று இலவசச் சாப்பாடு. அன்று ஆரம்பிக்கும் இலவசம் என்றும் தமிழ் சமுதாயத்தை விட்டபாடில்லை.

நோயுடன் போராடும் மனைவி மற்றும் இரண்டு வயதேயான முத்துமாரி என்ற குழந்தையுடன் மணலூத்து என்ற கிராமத்தில் குடியேறுகிறான் அழகிரி. இரண்டு வருடங்களில் தன் மனைவியை இழந்து ஆவுடையுடன் வாழ்க்கையைத் தொடர்கிறான். தாய் தகப்பன் இல்லாமல் வந்து சேரும் கருப்பனை அணைத்து, மாடு மேய்க்கும் வேலையில் அமர்த்தி அவனையும் கிராமத்தில் ஒருவனாக்குவது, கந்தையாவுடனான பாசத்தோடு கூடிய நட்பு, மகள் முத்துமாரி தன் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் அழகிரி வெளிக்காட்டும் உணர்ச்சி, மாடசாமியின் மனைவியை அப்பையா கெடுக்க முயலும் சமயம் அழகிரியின் தார்மீகக் கோபம், அதற்கு அப்பையா பழிவாங்கும் படலமாகக் கூட்டும் ஊர் கூட்டத்தில் அழகிரியின் முதிர்ச்சியான செயல்பாடு போன்ற இடங்களில் பூமணியின் எழுத்து உச்சத்தை அடைந்துள்ளது.

அழகிரியின் மகள் இறப்பிற்கு வேப்ப மரத்தடியில் பல மணித்துளிகள் கந்தையாவும், அவன் மனைவியும் துக்கம் கேட்கிறார்கள். ஆனால் வில்லிசேரிக்காரர் அழகிரியை வரவழைத்து துக்கம் கேட்கும் இடத்தில் கிராமத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை அழுத்தமாகக் கூறிச் செல்கிறார் பூமணி. துக்கத்தில்கூட மனிதர்களுக்குள் இருக்கும் உயர்வு தாழ்வின் வெளிப்பாடு எந்த ஒரு நுண்புலன் கொண்ட வாசகனையும் சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டும். இதைத் தவிர கிராமத்தில் டீக்கடை வந்தது, அங்கு பேப்பர் படிப்பது, கட்சி போஸ்டர் ஒட்டுவது என்ற விஷயங்களையும் வரலாற்று ஆவணப்படுத்துதல்களாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படைப்பில் எந்த ஒரு பாத்திரத்தையுமே பூமணி அதீதமான தீவிரத்தன்மை கொண்டவர்களாகப் படைக்கவில்லை. கெட்ட எண்ணமோ, நல்லதோ எல்லாமே ஓர் எல்லைக்குள் அடக்கம். பணபலம் மற்றும் ஜாதியின் பெயரால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் மிக நுட்பமாகவும் கூர்மையுடனும் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

கருப்பனுக்கு முத்துமாரியின் மீதுள்ள ஆசை நிரசையாகிறது. முத்துமாரியின் வாழ்க்கைப் போக்கை மற்றவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் சுதந்திரமின்மை முத்துமாரியின் முதல் திருமணம் மற்றும் அறுத்து விட்டவுடன் அவளுக்கு நடக்கும் அடுத்த திருமணம் மூலம் தெளிவாகிறது. இது அந்த காலத்தில் தவிர்க்க முடியாத நடைமுறையாக இருந்தாலும், இன்றும் அதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தும் தங்களுக்கு எந்த பயனும் இல்லை எனத் தொடங்கும் நாவல், அழகிரியின் பேரன் சுடலை படித்தால் நல்ல வேலைக்குச் செல்லலாம் என்ற கனவோடு முடிகிறது. செருப்புத் தொழிலாளியின் வாழ்விலிருந்து அடுத்த தலைமுறையை ஒரு நம்பிக்கையை நோக்கி எடுத்துச் செல்வது மற்றொரு சிறப்பு.

அத்தனை ஏற்றத் தாழ்வுகளிலும் கிராமம் முழுதும் ஓர் இணக்கத்தோடு வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலைமை அப்படி இருக்கிறதா எனத் தெரியவில்லை. வட்டார மொழி புரியாதவர்களுக்கு ஏதுவாக இறுதியில் “மக்கள் மொழி வழக்கு” என்ற பகுதி சேர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பொதுவாக காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நாவல்கள் தவறாமல் படிக்கப்பட வேண்டியவை என்பதற்கு இந்த நாவல் மற்றொரு உதாரணம்.

இந்தப் படைப்பை படித்து முடிக்கும் சமயம் அன்றிருந்த கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக நாம் வாழ்வது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை. இது தவறாமல் படிக்க வேண்டிய படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நினைக்கிறேன்.

முன் முடிவுகள், மனத்தடைகள் மற்றும் மன அழுக்குகளுடன்தான் நம்மில் பலரும் வாழ்கிறோம். இதைப் போன்ற படைப்புகள் ஓரளவிற்காவது அந்த எண்ணங்களை அசைத்துப் பார்க்கவும், மறு பரிசீலனை செய்யவும் தூண்டலாம்.
இந்த கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக