ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பஷீரின் பால்யகால சகி - காதலின் ருசி

பால்யகால சகி மலையாள எழுத்தாளர் பஷீரின் மற்றுமொரு குறுநாவல். தமிழில் குளச்சல் மு. யூசுப் மொழிபெயர்த்துள்ளார். பாவண்ணன் மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: "வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை" என்ற திண்ணைக் கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

"இளம்பருவத்துத் தோழி – நாவலின் கையெழுத்துப் பிரதியை பத்தாண்டுகளுக்கும் மேலாக தன்வசமே பஷீர் வைத்திருந்ததாக ஒரு குறிப்பு நூலில் உள்ளது. கிட்டத்தட்ட ஐந்நூறு பக்கங்களுக்கும் மேலாக எழுதிய நாவலை ஏழுமுறைக்கும் மேலாக அதைத் திருத்தித்திருத்தி எழுதி எழுபது பக்கங்களாகக் குறைத்தார் பஷீர்."

இதை 500 பக்க நாவலாக எழுதி இருந்தால் கூட இந்த அளவு உணர்ச்சிகரமாகவும், அழகுணர்ச்சியுடனும் அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒருவித குழந்தைதனத்துடனும், மெல்லிய நகைச்சுவை உணர்வுடனும் கதையைத் தொடங்குகிறார். பின்பு அது காதலாக மலர்ந்து, இறுதியில் நிறைவேறாமல் முடியும் போது பஷீரின் உழைப்பும், படைப்பின் அழியாத் தன்மையும் கைகூடிருப்பது தெளிவாகிறது.

கதை என்றால் பணக்கார வீட்டில் பிறந்த மஜீதும், ஏழ்மையிலுள்ள சுகராவும் இளமைக் கால நண்பர்கள். அந்த நட்பு காதலாகிறது. ஆனால் தந்தையின் கோபத்தால் வீட்டைவிட்டு வெளியேறும் மஜீத் பல துன்பங்களுக்கு ஆளாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பும் போது வீட்டின் நிலைமை தலிகீழாகி உள்ளதையும், சுகரா திருமணமாகி சுகமில்லாது வாழ்வதையும் அறிந்து செய்வதறியாது வருந்துகிறான். அந்த காதல் மட்டும் மஜீத் மற்றும் சுகராவின் மனங்களில் நீங்காமல் இருக்கிறது. மஜீத் குடும்பத்தைக் காப்பாற்றவும், சுகராவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் அவனுக்கு சுகராவின் மரணச் செய்தி கிடைக்கிறது.

இந்த படைப்பைப் படித்து அன்று இரவெல்லாம் உறக்கமில்லை. எப்படி மோகமுள் பாபுவும், யமுனாவும் அந்தரங்கமாக என்னுடன் வாழ்கிறார்களோ அதே போல் பஷீரின் மஜீதும், சுகராவும் என் வாழ்க்கைப் பயணத்தில் கூட வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பல விஷயங்களை வாசகனின் கற்பனைக்கு பஷீர் விட்டுச் சென்றுள்ளார். மஜீத் இறுதியில் வீட்டை விட்டு செல்லும் போது சுகரா ஏதோ சொல்ல வந்து, அது இன்றுவரை சொல்லாமலே உள்ளது. மற்றொரு இடத்தில குடும்பம் வறுமையில் இருக்கும் போது ஒரு பணக்கார கொடை வள்ளலான முஸ்லீம் ஒருவரை சந்தித்து உதவி கேட்கிறான். ஆனால் அவர் ஒரு ரூபாய் கொடுக்கிறார். இந்த இடத்தில ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு கொடை வள்ளலால் அத்தனை ஏழைகளுக்கும் உதவ முடியுமா? அந்த மாதிரி எதிர் பார்க்க முடியுமா? இதற்கும் ஒரே பதில் என்றும் கூற முடியாது என்றே நினைக்கிறேன்.

பஷீரின் இந்த புனைவு ஓர் அழியாத காவியம் என்றே கூறலாம். இந்த படைப்பில் குறையே இல்லையா என்று கேட்கலாம். இதிலுள்ள நிறைகளைப் பார்க்கும் போது, ஒரு வாசகனாக எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. அதெல்லாம் விமர்சகனின் கவலை. படித்ததில்லை என்றால் நிச்சியம் படித்துப் பார்க்கவும்.

காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ.60/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக