வியாழன், 24 பிப்ரவரி, 2011

கோபிகிருஷ்ணனின் "தூயோன்" சிறுகதைகள் தொகுப்பு


எழுத்தாளர் ஜெயமோகன் திண்ணையில் கோபிகிருஷ்ணன் மறைந்த போது எழுதிய ஓர் இரங்கல் கட்டுரை மூலம் தான் கோபிகிருஷ்ணனின் முதல் அறிமுகம். பிறகு எழுத்தாளர் எஸ்.ரா.வின் கோபிகிருஷ்ணன் பற்றிய ஓர் அருமையான கட்டுரை அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கக் கிடைத்தது. அவரின் ஜெமோ,எஸ்.ரா கட்டுரைகள் படிக்கக் கிடைக்காமல் இருந்திருந்தால் ஒரு நல்ல எழுத்தாளரின் படைப்புக்களைப் படிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.அவருடைய தூயோன் சிறுகதைகள் தொகுப்பு நண்பர் திருமூர்த்தி (இவர் எஸ்.ரா.வின் பரம விசிறி. எஸ்.ரா.வின் சமீபத்திய "துயில்" நாவல் வெளியீட்டில் அதை இ.பா.விடமிருந்து பெற்றுக் கொண்ட வாசகர்) உபயம். அவருக்கு நன்றிகள்.

சமுதாயத்தைப் பற்றிய கூர்ந்த கவனிப்பும், யதார்த்தமும் கலந்தது தான் கோபியின் படைப்புகள். இந்தத் தொகுப்பில் 22 கதைகள் உள்ளன.இவர் கதைகள் அனைத்தும் 4 அல்லது 5 பக்கங்கள் கொண்டவைகள் தான். கடவுள் நம்பிக்கை இல்லாமை அல்லது அதைக் கிண்டலடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துதல், அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள், பொருளாதார சிக்கல்கள், மனதில் நொடியில் தோன்றி மறையும் சலனங்கள், பெண் குழந்தையின் மீது பாசம் போன்றவைகள் தான் இவரின் கதைக் கருக்கள். முக்கியமாக இவர் எந்த ஸ்தாபனத்திற்கும் எதிரானவர் போல் உள்ளது. இவருக்கு வேலை இடத்தில நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் செல்லும் இயல்பில்லாததால், தொடர்ந்து வேலையைத் துறந்து வேறு வேலை சேருவதோ, இல்லை வேலை வாங்கித் தருவதாக வந்தால் அவர்கள் தொல்லை தான் தர வருகிறார்கள் என்று கதை மாந்தர்கள் மூலம் சித்தரிக்கிறார். இந்தத் தொகுப்பை மிகவும் ரசித்துப் படித்தேன்.

தூயோன், புயல்,வயிறு,உடைமை மற்றும் ஒரு பேட்டியின் விலை முப்பத்தைந்து ரூபாய் கதைகள் எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. அதிலும் புயல் கதையில் ஒரு பெண் வேலைக்குச் சென்று வருவதைப் (அந்தக் காலத்தில்) பற்றி உள்ள சிக்கல்களை மிக அழகாக விவரித்துள்ளார். தூயோன் கதை படித்தால் நம் வாழ்வில் மனிதபிமானமில்லாமல் கடந்து சென்ற சில நொடிகள் கட்டாயம் நினைவிற்கு வரும்.

தூயோன் கதை அடுத்த பதிவில்

தமிழினி வெளியீடு. விலை ரூ.40 /=

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக